தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

இந்தியாவுக்கு வருமாறு ஆப்கானிஸ்தான் அதிபருக்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்திய பிரதமரும், எனது நண்பருமான நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். இந்தியா உங்கள் இரண்டாவது வீடு என்றும் விரைவில் இந்தியா வருமாறும் அழைப்புவிடுத்தார். அப்போது பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சினைகள் பற்றி பேசலாம் என்றும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் ஜனநாயக ஆட்சி முறைக்கும், அமைதிக்கான நடவடிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்றும் கூறினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.