தேசிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தாஜ்மகாலுக்கு பிரதமர் மோடி செல்லமாட்டார் - மத்திய அரசு தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தாஜ்மகாலுக்கு பிரதமர் மோடி செல்லமாட்டார் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக்குழுவுடன் 2 நாள் பயணமாக நாளை (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். நாளை நண்பகலில் ஆமதாபாத் வரும் டிரம்பை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இருவரும் இணைந்து பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு பிற்பகலில் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. டிரம்ப் குடும்பத்தினர் தாஜ்மகாலை மிகவும் வசதியாக சுற்றிப்பார்க்கும் வகையில், இந்த நிகழ்வில் இந்திய உயர்மட்ட தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என குறிப்பிட்டு உள்ளன.

தாஜ்மகால் பயணத்தை முடித்துவிட்டு பின்னர் டிரம்ப் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். இந்த பேச்சுவார்த்தையில் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT