புதுடெல்லி,
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் அனைவருக்குமானது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நடுத்தர வர்க்கம், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர் என அனைவரையும் பாதுகாக்கும் பட்ஜெட்.
தேர்தலுக்கு பின் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான ட்ரெய்லர்தான் இடைக்கால பட்ஜெட். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமான உதவித்திட்டம் 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும். இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதிகபட்சமாக 3 கோடி விவசாயிகளே பயன்பெற்றனர்.
சமூகத்தின் கடைகோடி குடிமகனுக்கும் இத்திட்டம் சென்றடையும். ஒவ்வொரு குடிமகனும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் திட்டங்கள் இதில் உள்ளன. ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி யோஜனா திட்டங்களில் அனைத்து மக்களும் நன்மை பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.