தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை பதவி ஏற்பு : உலக தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு உலக தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதேபோல் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளான வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் நாட்டு அதிபர்கள் உறுதி செய்துள்ளனர். நேபாளம், மொரிசியஸ் மற்றும் பூட்டான் பிரதமர்களும், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

தாய்லாந்து சார்பில் சிறப்பு தூதர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT