நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். பிரதமரின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் ஆற்றிய உரை, ஒரு தீவிர அரசியல் பிரச்சினையில் பொதுக் கருத்தை பாதிக்கும் நோக்கில் அரசியல் தன்மை கொண்டதாகவும், சார்பு நிலைப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது. அடிப்படையில் ஒரு அரசியல் உரைக்கு பொது நிதியுதவி பெறும் தளங்களைப் பயன்படுத்துவது தேர்தல் நெறிமுறைகளின் கடுமையான மீறலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல்களின் போது தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டிய சமமான போட்டிச் சூழலை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைப்பதாகவும், இதில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.