புதுடெல்லி,
தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனுவை மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தலைமை நீதிபதி கோகோய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை 10 நாட்களுக்குள் மத்திய அரசும், சிபிஐயும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றுள்ள நாகஸ்வரராவ் பெரிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க கூடாது. அலோக் வர்மாவுக்கு எதிராக ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்தும் விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பட்நாயக் மேற்பார்வை செய்வார்.
இந்த விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் சிவிசி முடிக்க வேண்டும். அக்டோபர் 23 ஆம் தேதிமுதல் இன்றைய தேதி வரை நாகஸ்வரராவால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமல்படுத்தக்கூடாது. நாகஸ்வரராவ் எடுத்த முடிவுகளை ரகசிய அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல், இந்த வழக்கின் மறு விசாரணை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.