புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அடைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று குற்றவாளிகள் அவரை கொலை செய்துள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர் ஷாகிருதுல்லா எனவும் அவர் உளவுப்பார்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
சிறையில் சக கைதிகள் மூன்று பேர் ஷாகிருதுல்லாவை அடித்துக்கொலை செய்துள்ளனர், இதனையடுத்து உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.