அமிர்தசரஸ்,
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், அக்கட்சியில் இருந்தும் விலகினார். புதிய கட்சியை துவங்க அமரிந்தர் சிங் ஆயத்தமாகி வருகிறார். அமரிந்தர் சிங் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியதும் பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக சரன் ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.
புதிய முதல் மந்திரியான சரன்ஜித் சிங் சன்னிக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவரான சித்துவுக்கும் இடையே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விஷயத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த சித்து,பின்னர் கட்சி மேலிடம் சமரசம் செய்ததால் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில், பஞ்சாபில் அரசு தலைமை வழக்கறிஞர் விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றிற்கு ஆதரவாக அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனதற்கு சித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் ஏபிஎஸ் தியோல், ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், தியோலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க பஞ்சாப் முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி மறுப்பு தெரிவித்து விட்டார்.
அதேபோல், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்து, பஞ்சாப் முதல் மந்திரி தவறான வாக்குறுதிகளையும் பொய்களை பேசி வருவதாகவும் விமர்சித்து இருந்தார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அக்கட்சி தலைவர்களிடயே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.