தேசிய செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வில் சரக்கு, சேவை வரி குறித்து கேள்வி

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வை யு.பி.எஸ்.சி. நேற்று நாடு முழுவதும் நடத்தியது.

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வை யு.பி.எஸ்.சி. நேற்று நாடு முழுவதும் நடத்தியது. காலை 9.30 மணிக்கு முதல் தாளுக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு 2ம் தாளுக்கும் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை நாடு முழுவதிலும் லட்சக்கணக்கானோர் எழுதினர்.

நேற்றைய முதல்நிலை தேர்வின் முதல் தாளில் மோடி அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. சரக்கு, சேவை வரி விதிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்று கேட்கப்பட்டு அதற்கு தேர்ந்தெடுத்து பதில் அளிக்க 4 விடைகளும் தரப்பட்டு இருந்தன.

இதேபோல் பினாமி சொத்து பரிமாற்ற தடை சட்டதிருத்தம் 2016, வித்யாஞ்சலி யோஜ்னா(கல்வியறிவை மேம்படுத்தும் திட்டம்), தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்பு ஆகியவை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

நேற்றைய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு எத்தனைபேர் விண்ணப்பித்து இருந்தனர், அவர்களில் எவ்வளவு பேர் தேர்வை எழுதினர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதேநேரம் தேர்வுகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி நடந்ததாக யு.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.