புதுடெல்லி,
கேரள மாநிலத்தில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
,கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பிரதமர் மோடி, நேரில் சென்று பார்வையிட்டதோடு, முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி உதவியை அளித்தார். மேலும், நிதி உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்றும், நாளையும் பார்வையிட உள்ளார். இந்த 2 நாட்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் ராகுல் காந்தி, மீனவர்கள், தன்னலம் கருதாமல் தொடர்ந்து சேவை செய்து வரும் தன்னார்வலர்கள், நிவாரணம் வேண்டுவோருக்கு உதவி வருகிறவர்கள் ஆகியோரை சந்தித்தும் பேசுகிறார். மேலும் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.