தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸ்: பா.ஜனதா தாக்கல்

நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்தார். இந்நிலையில் ராகுல்காந்தி மீது உரிமை மீறல் நோட்டீஸை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி நாடாளுமன்ற விவகார மந்திரி அனந்த குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் நடவடிக்கை குழந்தைத்தனமாக உள்ளது. அவர் இன்னும் பக்குவப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது ஆகும். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சாட்டி பேசவேண்டும் என்றால் அதற்கு முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கவேண்டும். மேலும், அதற்கான ஆதாரத்தையும் அவர் சபாநாயகரிடம் தரவேண்டும். ஆனால் ராகுல்காந்தி அப்படிச் செய்யவில்லை. இதனால் சபையை தவறாக நடத்தியதற்காகவும், பொய்யான தகவலை தெரிவித்ததற்காகவும் அவர் மீது பா.ஜனதா எம்.பி.க்கள் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பா.ஜனதா எம்.பி. பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீசை தாக்கல் செய்தார்.