புதுடெல்லி,
ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை, அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா திட்சீத் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:- உத்தர பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறுவது தவறானது. கட்சி எங்கெல்லாம் என்னை பிரச்சாரம் செய்ய சொன்னதோ அங்கெல்லாம் நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். உடல் நலக்குறைவு காரணமாக சில இடங்களுக்கு என்னால் செல்ல முடியவில்லை. தற்போது எனது உடல் நிலை சீராக உள்ளது. பனராஸ் பகுதிக்கு விரைவில் பிரச்சாரம் செய்ய செல்ல உள்ளேன்.
உத்தர பிரதேசத்தில் உருவாகி உள்ள காங்கிரஸ் - சமாஜ் வாடி கூட்டணி வரவேற்கதக்கது. உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு தலைவரே கிடையாது. பிரதமர் மோடி அங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். ஆனால், அவரால் முதல் அமைச்சராக முடியாது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு அரசியல் அனுபவமும், பக்குவமும் வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இருப்பினும் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்த பாடுபட்டு வருகிறார். விவசாயிகளுக்காக பேசும் ஒரே நபர் ராகுல் காந்தி மட்டும் தான். அவர் மனதில் உள்ளதை பேசக் கூடிய தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். ராகுல் காந்தி இதுவரை பிரதமர் ஆகவில்லை. அந்த வாய்ப்பு அவருக்கு பிற்காலத்தில் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.