ஸ்ரீநகர்,
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரிவினைவாத அமைப்புகள் இன்று பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனை தொடர்ந்து காஷ்மீரில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பினை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் பலர் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.
ஸ்ரீநகரில் இருந்து பத்காம் வரை மற்றும் ஸ்ரீநகரில் இருந்து அனந்த்நாக் மற்றும் காஜிகண்ட் நோக்கி செல்லும் ரெயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வருடம் 47 முறை பகுதி அளவில் அல்லது முழு அளவில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.