தேசிய செய்திகள்

பிரதமர் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை அளிக்கிறது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரண நிதி (பி.எம்.கேர்ஸ் நிதி) என்ற பொது அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக பிரதமர் மோடி செயல்படுவார். ராணுவ மந்திரி, உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிதிக்கு ரெயில்வே துறை ரூ.151 கோடி நன்கொடை அளிக்க உள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், நான் ஒரு மாத சம்பளத்தையும், 13 லட்சம் ரெயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குவார்கள். இதன் மொத்த தொகை ரூ.151 கோடி ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT