தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு - நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை

ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர் நகரில் திருட்டு மற்றும் கொள்ளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாகூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவராகிய அனுமன் பெனிவாலின் தம்பியும் ராஜஸ்தான் மாநிலத்தின் எம்.எல்.ஏவுமான நாராயண் பெனிவாளின் சொகுசுக்கார் அவரது வீட்டு வாசலில் கடந்த சனிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஜெய்பூர் காவல் நிலையத்தில் நாராயண் பெனிவால் புகார் அளித்துள்ளார்.

நேற்று இரவு எம்.எல்.ஏ தனது சொகுசுக்காரினை விவேக் விகார் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலில் நிறுத்தியுள்ளார். இன்று காலை அவர் வந்து பார்த்த போது கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை. இது குறித்து ஜெய்பூர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ நாராயண் பெனிவால் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனது கார் திருடப்பட்டது குறித்து எம்.எல்.ஏ நாராயண் பெனிவால், கூறியுள்ளதாவது, "நான் எப்போதும், விவேக் விகார் பகுதியில் உள்ள எனது வீட்டின் வாசலில் தான் காரினை நிறுத்துவேன். அதேபோல் தான், சனிக்கிழமை இரவும் நிறுத்தினேன். இன்று காலை வந்து பார்த்தபோது, நிறுத்தப்பட்ட இடத்தில் கார் இல்லை.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. திருடர்கள் இங்கு நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே வருகிறார்கள். காவலர்களைப் பார்த்து திருடர்களுக்கு எந்த பயமும் இல்லாமல் போய்விட்டது. எம்.எல்.ஏவான என்னுடைய காரே திருடப்பட்டிருக்கிறது என்றால், சாதாரண மக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறிதான். காவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக நகபந்தியில் இருக்கும் மக்களை விசாரணை என்ற பெயரில் தொல்லை செய்து வருகிறார்கள். ஆனால், திருடர்கள் மிகவும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்" என கூறினார்.

இத்திருட்டு குறித்த விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் அடையாளம் தெரியாத அந்த திருடர்கள் அகப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.