புதுடெல்லி,
1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி இந்திய எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிழந்தனர். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் பணியின்போது இறந்த காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.
அவ்வகையில் இன்று நாடு முழுவதும் காவலர்களுக்கான வீரவணக்க நாள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். மத்திய இணை மந்திரி சத்யபால் சிங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த ஆண்டு பணியில் இருக்கும்போது உயிர்நீத்த காவலர்களின் பெயர்களை உளவுத்துறை தலைவர் ராஜீவ் ஜெயின் வாசித்தார். உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா மற்றும் அனைத்து மத்திய துணை ராணுவப் படைகளின் தலைவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியின்போது 383 காவலர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.