புதுடெல்லி
2018-ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தொடங்கியது. இக்கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெறுகிறது. இதில் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்காலக்கட்டத்தில் மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவை மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பாராளுமன்ற இருஅவைகளும் கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆவது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநிலங்கலவை இன்று தொடங்கியது. புதிய உறுப்பினர் பதவி ஏற்று கொண்டார். பின்னர் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டனர். அதுபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 11. 20 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை தொடங்கியதும் மீண்டும் அ.தி.மு.க எம்.பி.க்களும் தெலுங்கு தேச எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து விவாதம் நடத்த கோரி கோஷம் எழுப்பினர். மாநிலங்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல கட்சிகள் கடிதங்கள் கொடுத்து உள்ளன. ஒவ்வொரு விவகாரங்களாக விவாதம் நடத்தலாம் என்று வெங்கய்யா நாயுடு கூறினார். ஆனால் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.பின்னர் சபை கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பற்றி விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேரமில்லா நேரத்தின் போது விவாதிக்கப்படும் என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் நோட்டீஸை ஏற்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.