தேசிய செய்திகள்

10 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல்; சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

அடுத்த 2 நாட்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதத்துடன் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் 37 பேரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, அந்த 37 எம்.பி. பதவிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை முன்னிட்டு வருகிற மார்ச் 16-ந்தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். அதற்கான வாக்குகளும் அன்று மாலை 5 மணியளவில் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதனை முன்னிட்டு, தமிழகம், தெலுங்கானா, சத்தீஷ்கார், ஒடிசா, அசாம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இருந்து 37 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்தலை அடுத்து, டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவருடைய தலைமையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இமாசல பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளது.

இதனால், அந்த மாநிலங்களில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.