

மஸ்கட்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்கைலைட் என பெயர் கொண்ட பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் காசாப் துறைமுகத்தில் இருந்து வடக்கே 5 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடியாக கப்பலில் இருந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடிய, அதிகாரிகளின் ஒருங்கிணைந்த பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதில், கப்பல் ஊழியர்கள் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் 15 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 5 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார்? எதற்காக இந்த தாக்குதல்? கப்பலுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை ஓமன் அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இந்தியர்கள் பயணம் செய்த எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடந்துள்ளது.