பாட்னா,
பீகாரில் இருந்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த புகழ்பெற்ற வக்கீல் ராம்ஜெத்மலானி சமீபத்தில் மரணமடைந்தார். இதனால் காலியாக இருந்த அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் பா.ஜனதா சார்பில் சதிஷ் சந்திர துபே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரைத்தவிர வேறு யாரும் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சதிஷ் சந்திர துபே போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டார்.
இவர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜனதா அரசில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இடைத்தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள சதிஷ் சந்திர துபேயின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.