பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
புதுச்சேரியில் தேர்தல் முடிவு தெரிந்து 40 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையேயான அமைச்சரவை பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட
இழுபறிக்கு பிறகு தற்போது சுமுகமாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. சட்டப்பேரவை தலைவர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் ஏம்பலம் செல்வம், கல்யாணசுந்தரம், ஜான்குமார், சாய் சரவணன் குமார், ரிச்சர்டு, நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
300 இடங்களில் தடுப்பூசி முகாம்
கூட்டத்தில் கட்சி தலைமை அறிவுறுத்திய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக யோகா தினம் வருகின்ற 21-ந் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பா.ஜ.க. சார்பில் 2 நாட்கள் யோகா முகாம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.கொரோனா இல்லாத புதுச்சேரியை உருவாக்க
ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுடன் இணைந்து பா.ஜ.க. சார்பில் 300 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜூன் 25-ந்தேதி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். அன்றைய தினம் பா.ஜனதா கட்சி சார்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமி அறிவிப்பார்
புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது என்று சாமிநாதனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் பா.ஜ.க.வின் பணி முடிந்துவிட்டது. தேசியக்கட்சி என்பதால் மாநில கட்சிகள் போல நாங்கள் உடனடியாக முடிவு எடுக்க முடியாது. இனி முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் அமைச்சரவை அமைக்கும் முடிவை அறிவிப்பார். எங்கள் கூட்டணியில் பிரச்சினை, குழப்பம் ஏதுமில்லை. முதல்-அமைச்சர் விரைவில் அமைச்சர்களை அறிவிப்பார். அதனை தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர், அமைச்சர் ஆவார்கள் என்றார்.