தேசிய செய்திகள்

மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு தர்மஅடி

மங்களூருவில் மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு:

மங்களூருவில் மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் தொல்லை

மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட கெரக்காடு பகுதியை சேர்ந்த மைனர்பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாள். இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாள். இந்த நிலையில் மைனர்பெண் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் தொழிலாளி ஒருவர் அவளை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

மேலும் மைனர்பெண்ணை அவர் சில்மிஷம் செய்ததுடன், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து மைனர்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாள்.

கம்பத்தில் கட்டி வைத்து...

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மனர்பெண் பள்ளிக்கு சென்றாள். அப்போது மைனர்பண்ணின் தந்தையும், அவரது நண்பர்களும் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அந்த தொழிலாளி வந்து, மைனர்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனை பார்த்த மைனர்பெண்ணின் தந்தை மற்றும் அவருடன் வந்தவர்கள் தொழிலாளியை கையும், களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

இதுகுறித்து முல்கி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முல்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசாரிடம், அந்த நபரை அவர்கள் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மைனர்பெண்ணுக்கு அந்த தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், தொழிலாளியை தாக்கியதாக மைனர்பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.