தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.44,000 கோடி விடுவிப்பு

ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு 1.59 லட்சம் கோடி ரூபாயை கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வெளிச்சந்தையில் கடனாக பெறப்பட்ட இந்த தொகை மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பொது செலவினங்களை மாநிலங்கள் எதிர்கொள்ள இந்த இழப்பீட்டுத் தொகை உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.44,000 கோடியை ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வரி வசூலிப்பதில் இருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.

SCROLL FOR NEXT