நிவாரணம்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரணம் பெற சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்கள் வைத்துள்ள எந்திர விசைப்படகு உரிமையாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் குறைவாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக ஆண்டுதோறும் வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்து வந்தது.
வருமான சான்றிதழ்
இந்த வருமான உச்ச வரம்பு தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தில் இருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நிவாரண தொகை பெற வருமான சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று இனி வருங்காலங்களில் ஆண்டுதோறும் மீனவர்கள் வருமான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை திரும்ப பெறப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் வரவேற்பு
முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மீனவர் பேரவையின் புதுச்சேரி மாநில தலைவர் வக்கீல் மலை. தர்மலிங்கம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இடைக்கால நிவாரணம் பெறுவதற்கு வருமான சான்றிதழ் கேட்டு மீனவ மக்களை அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனர். இந்நிலையில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றதும் மீனவர்களுக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் நிவாரண உதவி பெற வருமானச் சான்றிதழ் தேவையில்லை என்றும், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.