அமராவதி,
நாட்டின் பிற பகுதிகளைப்போலவே ஆந்திராவிலும் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. அங்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கு அதிகமான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாநிலத்தில் இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்படுகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி வழங்கப்படுகிறது. வெளியரங்க நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 200 பேர், உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி கட்டாயம். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும், வர்த்தக நிறுவனங்கள் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவும் முதல்-மந்திரி அறிவுறுத்தினார்.
175 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு கொரோனா மையம் நிறுவ சுகாதார அதிகாரிகளை அறிவுறுத்திய ஜெகன்மோகன் ரெட்டி, மக்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.