தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு - கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இதில் சந்த்பாக் பகுதியில் அங்கித் சர்மா என்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வன்முறையில் இறந்த அங்கித் சர்மாவின் குடும்பத்துக்கு நேற்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் இழப்பீடு அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், அங்கித் சர்மா ஒரு துணிச்சலான அதிகாரி. வன்முறையின்போது அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரைக்குறித்து நாடே பெருமைபடுகிறது. அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.