மண்டிகள் மூடப்படாது
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 40 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த சட்டங்கள், வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களை (மண்டி) மூடச்செய்து விடும் என்றும், பெருவணிகர்களின் பிடியில் விவசாயிகள் சிக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.இதற்கிடையே நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி கொண்ட வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் மண்டிகள் கடன் வாங்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், மண்டிகள் ஒழிக்கப்படுமோ என்ற விவசாயிகளின் அச்சம் நீங்கும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.
திசை திருப்பும் செயல்
ஆனால், இந்த முடிவை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 சங்கங்கள் அடங்கிய கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலில், ரூ.1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் என்பதே ஒரு திசை திருப்பும் செயல். ஏனென்றால், அரசுத்தரப்பில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கூட அதற்கு ஒதுக்கப்படவில்லை.2020-2021 பட்ஜெட்டில் ரூ.208 கோடியும், நடப்பு பட்ஜெட்டில் ரூ.900 கோடியும் ஒதுக்கப்பட்டன. கடன்களை பொறுத்தவரை, கடந்த மார்ச் 31-ந் ததி நிலவரப்படி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 241 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
வெற்று அறிவிப்பு
பெரும்பாலும் கடனுக்கு வர்த்தக வங்கிகளையே சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. வங்கிகளின் மோசமான நிர்வாகமும், பெருமுதலாளிகளுடனான அவர்களது தொடர்பும் தெரிந்த விஷயம்தான். வெறும் 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்வதும், கடன் உத்தரவாதம் வழங்குவதும் மட்டுமே அரசின் வேலை.
மண்டிகளை ஒழிக்கும் வேளாண் சட்டங்களில் மோடி அரசு இன்னும் உறுதியாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், மண்டிகளை கடன் வாங்க அனுமதிப்பதாக மத்திய மந்திரிசபை எடுத்த முடிவு, வெற்று அறிவிப்புதான். மிகச்சிறிய, முக்கியத்துவம் இல்லாத முடிவைத்தான் அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.