புதுடெல்லி
நாட்டில் பா.ஜ.க. தலைமையில் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-வது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. அதில் இருந்து இதுவரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் ரூ.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் வான், கடல், தரை வழி போக்குவரத்துக்கான பணிகளும் அடங்கும். இதன்படி 49 ரெயில்வே பணிகளுக்கு ரூ.1.80 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 27 நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.2.39 லட்சம் கோடியும், நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டை முன்னிட்டு, 10 மெட்ரோ ரெயில் பணிகளுக்கு ரூ.1.31 லட்சம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, விமான துறை பலன் பெறும் வகையில் 5 புதிய விமான நிலையங்கள் அமைக்க மொத்தம் ரூ.9 ஆயிரத்து 6 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சரக்கு போக்குவரத்திற்கான சீர்திருத்தங்களுடன் ஒரு பெரிய துறைமுக திட்டத்திற்காக ரூ.1.45 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.