புதுடெல்லி,
வங்கியில் மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும், கடன் விவரமும் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கூறினேன். இதற்கு நிதி-மந்திரி பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், 2009-10 மற்றும் 2013-14-ல் (யுபிஏ ஆட்சி) ஷெட்யூல் கமர்ஷியல் வங்கிகள் ரூ. 1,45,226 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர, இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமில்லை. ராகுல் காந்தி இந்த விவகாரத்தை மக்களிடம் திசை திருப்புகிறார் என்று கூறினார்.
மேலும் அவர், கடனை திருப்பி அளிக்காதவர்கள் தங்களிடம் பணம் இருந்தும் திருப்பி செலுத்தாதவர்கள், பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றவர்கள், வங்கிகள் அனுமதியின்றி சொத்துக்களை விற்றவர்கள் ஆகியோர் வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்கள் யுபிஏவின் போன் பேங்கிங்குடன் தொடர்புடையவர்கள், புரோமோட்டர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 9,967 கடன் மீட்பு வழக்குகள், 3,515 எப்.ஐ.ஆர்.கள், சட்டங்களும் அமலில் உள்ளன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையாவிடமிருந்து முடக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 18,332.7 கோடி. மேலும் இவை குறித்து லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.