ஜெய்பூர்,
ராஜஸ்தானின் ஆல்வார் நகரில் தனகாஜி பகுதியில் கடந்த ஏப்ரல் 26ந்தேதி தனது கணவருடன் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்தது. பின் இருவரையும் சாலையோரம் இருந்த மணல் குன்றுக்கு பின்புறம் கொண்டு சென்றது.
அந்த கும்பல் கணவரை அடித்து, உதைத்து மரத்தில் கட்டி போட்டு விட்டு அவர் முன்னாலேயே அவரது மனைவியை கற்பழித்துள்ளது. இந்த சம்பவம் குற்றவாளியான 6வது நபரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த தம்பதி 3 மணிநேரம் கும்பலால் பிடித்து வைக்கப்பட்டு உள்ளது. பின்பு மாலையில் அவர்களை கும்பல் விடுவித்துள்ளது.
இதன்பின் இதுபற்றி யாரிடமும் அவர்கள் கூறாமல் அமைதியாக இருந்து விட்டனர். ஆனால், 6வது நபர் பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதுடன், வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவர் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கடந்த ஏப்ரல் 30ந்தேதி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜஸ்தான் அரசு போலீஸ் கான்ஸ்டபிள் பணியை வழங்கியுள்ளது. அந்த மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) ராஜீவா ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிளாக நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நியமன கடிதம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.