புதுடெல்லி,
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட ஒரு அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தற்போதுவரை பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.
இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், 'மாஸ்கோவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் ரஷிய அரசாங்கத்துடனும், மக்களுடனும் இந்தியா துணை நிற்கும்' என்று மோடி தெரிவித்துள்ளார்.