புதுடெல்லி,
விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம்" என்ற இந்தியாவின் பண்பை உலகறிய செய்துள்ளார் டெல்லியை சேர்ந்த டாக்ஸி டிரைவர் உத்கர்ஷ் பாண்டே. நள்ளிரவு நேரத்தில் தவித்த வெளிநாட்டு பெண்ணுக்கு அவர் செய்த உதவி, தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி நெஞ்சங்களை நெகிழ வைத்து வருகிறது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் வந்து இறங்கிய அவர், தங்குமிடத்திற்கு செல்ல டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாத நிலையிலும், எப்படியோ டிரைவரிடம் ஓ.டி.பி (OTP) எண்களைக் கூறி காரில் ஏறியுள்ளார். பயணத்தின் போது, பசி தாங்க முடியாமல் தவித்த அந்தப் பெண், தனக்கு பசிப்பதாகவும், அருகில் எங்கேனும் பிட்சா கடை திறந்துள்ளதா என்றும் டிரைவரிடம் கேட்டுள்ளார்.
பெண்ணின் நிலையை புரிந்துகொண்ட டிரைவர் உத்கர்ஷ் பாண்டே, சில நிமிடங்களில் ஒரு ஹோட்டல் அருகே காரை நிறுத்தினார். பின், காரை விட்டு இறங்கி உள்ளே சென்றார். அந்நிய நாட்டில், அதுவும் நள்ளிரவு நேரத்தில் டிரைவர் காரை நிறுத்திவிட்டு சென்றதால் பயந்துபோன அந்த பெண், தனது பாதுகாப்புக்காக உடனடியாக தனது கணவருக்கு ‘லைவ் லொகேஷனை’ பகிர்ந்துள்ளார். ஆனால், அடுத்த 2 நிமிடங்களில் டிரைவர் உத்கர்ஷ் பாண்டே, கையில் சுடச்சுட பிட்சாவுடன் திரும்பி வந்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதைக் கண்டு அந்தப் பெண் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போனார்.
சரியான நேரத்தில், பாதுகாப்பாக அந்த பெண்ணை அவர் தங்க வேண்டிய ஹோட்டலின் நுழைவாயில் வரை கொண்டு போய் சேர்த்தார் உத்கர்ஷ். அவரது உண்மையான அக்கறையை கண்டு நெகிழ்ந்த அந்த பெண், டாக்ஸி கட்டணத்துடன் சேர்த்து, பிட்சாவுக்கான தொகையையும் கொடுத்து, கூடுதலாக ரூ.1,000 பணத்தை அன்பளிப்பாக கொடுக்க முயன்றார்.ஆனால், அந்த டிரைவர், புன்னகையுடன் கைகூப்பி, கூடுதல் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மேலும், "அதிதி தேவோ பவ" (விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம்) என்று கூறி விடைபெற்றார்.
இந்திய டிரைவரின் இந்த நேர்மையையும், பாதுகாப்பான அணுகுமுறையையும் பார்த்து கண்கலங்கிய அந்த பெண், ஹோட்டலுக்குள் சென்றதும் சமூக ஊடகங்களில் வீடியோ மூலம் நடந்த சம்பவத்தை கூறி உத்கர்ஷ் பாண்டேவை பாராட்டினார். மேலும், "நான் கண்டிப்பாக எனது கணவருடன் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.