திருவனந்தபுரம்,
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதற்கு காங்கிரஸ், பா.ஜனதா எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாநில் அரசு பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் ஸ்திரமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது. பா.ஜனதா அதிதீவிரமாக போராடும் நிலையில் இடதுசாரி அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
கேரள அமைச்சர் விஎஸ் சுனில் பேசுகையில், சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டை வேடம் போடுகிறது. பா.ஜனதாவுடன் தொடர்புடைய 5 வழக்கறிஞர்கள் ஒருபுறம் சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மறுபுறம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி பிரச்சனை செய்ய முயற்சிக்கிறது. பா.ஜனதா பிரச்சனையை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாக்க விரும்புகிறது, என்று கூறியுள்ளார்.