புதுடெல்லி,
மாநிலங்களவையில் முதல் முறையாக சச்சின் தெண்டுல்கர் பேச முயற்சித்த போது போராட்டம் நடத்திய எம்.பி.க்களால் குறுக்கீடு நேரிட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக சச்சின் தெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டார். இன்று மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், இந்தியாவின் விளையாட்டுத்துறை பற்றி பேசவிருந்தார். பாராளுமன்றத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், முன்னாள் மன்மோகன் சிங்கை தொடர்புப்படுத்தி குஜராத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் - பாகிஸ்தான் சதிதிட்டம் தீட்டுகிறது என பிரதமர் மோடி பேசியதை எழுப்பி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. மாநிலங்களவையில் இவ்விவகாரம் இன்று மீண்டும் எதிரொலித்தது.
மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர் பேச முயற்சி செய்த போது காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்களுடைய வலியுறுத்தலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர், இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சச்சின் தெண்டுல்கர் பேசுகையில் இடையூறு ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களவை எம்.பி. ஜெயா பச்சன் பேசுகையில், அவர் (சச்சின் தெண்டுல்கர்) உலக அரங்கில் இந்தியாவிற்காக பெருமையை சேர்த்தவர், ஆனால் இப்போது நடக்கும் சம்பவம் அவமானக்கரமானது. அவரை பேச அனுமதித்து இருக்க வேண்டும், இன்று என்ன பேசபோகிறோம் என்பது தொடர்பாக எல்லோருக்கும் தெரியும். அவரை பேச அனுமதித்து இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டும்தான் பேச அனுமதிக்கப்படுமா? என கேள்வியை எழுப்பிஉள்ளார்.
மத்திய மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், சச்சின் தெண்டுல்கரை பேசவிடாமல் மாநிலங்களவையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம், மாநிலங்களவை சபாநாயகர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் அவர்கள் கடும் அமளியை ஏற்படுத்தி பேசவிடாமல் செய்து உள்ளனர், என கூறிஉள்ளார்.