தேசிய செய்திகள்

“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்

“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயராகும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் உன்னவ் தொகுதியின் எம்.பி.யான சாக்ஷி மகராஜ் பேசுகையில், என்னுடைய தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட வேண்டும் என சவால் விடுக்கிறேன். ராகுல் காந்தி என்னை தோற்கடித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். அதேசமயம், ராகுல் காந்தி தோற்றுவிட்டால், இந்தியாவில் இருந்து இத்தாலிக்கு சென்றுவிட வேண்டும்.

தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்றுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகா கூட்டணிக்கு முயற்சித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியைக் காட்டிலும், முந்தைய கூட்டணியை சேர்க்கவே ஆர்வமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

மேலும் எந்தவிதமான சுத்தத்தையும் பராமரிக்காமல் செப்டம்பர் மாதம் மானசரோவர் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.