தேசிய செய்திகள்

பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயநகர் வந்தார்

பரோலில் விடுவிக்கப்பட்ட அதிமுக(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சென்னை தியாகராயநகர் வந்து சேர்ந்தார்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சசிகலா தரப்பில் பரோல் கேட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள், சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா மாலை பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து காரில் சசிகலா புறப்பட்டு சென்னைக்கு சென்றார். காரில் முன் இருக்கையில் தினகரன் அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் சசிகலா அமர்ந்திருந்தார். சசிகலா காருடன் 10 கார்களில் அ.தி.மு.க.(அம்மா) பிரமுகர்கள் சென்றனர்.

வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் கட்சியினர் சசிகலாவை பார்ப்பதற்காக திரண்டிருந்தனர். காரில் இருந்தவாறு சசிகலா கைகூப்பி வணக்கம் தெரிவித்தவாறே சென்றார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, பர்கூர் வழியாக சென்னை வந்த சசிகலா, சென்னையில் உள்ள தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.