தேசிய செய்திகள்

பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி

உப்பள்ளியில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ லட்சத்தை மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சத்தை மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பகுதி நேர வேலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி ஜனதா பஜார் பகுதியை சேர்ந்தவர் நீலவ்வா. இவரது கணவர் கிருஷ்ணப்பா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நீலவவ்வா, கிருஷ்ணப்பா ஆகியோர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், நீலவ்வா ஆன்லைனில் பகுதி நேர வேலை பார்க்க முடிவு செய்தார். அதன்படி அவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். இந்தநிலையில் நீலவ்வாவின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

அதில், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்க்கலாம் என இருந்தது. இதையடுத்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தகவல்களை கூறினார். மேலும் தனது விவரங்களையும் அனுப்பினார்.

இந்தநிலையில் நீலவ்வா செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், தான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுவதாகவும், உங்களுக்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்பணம்

மேலும் இதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நீலவ்வா நம்பியுள்ளார். இதையடுத்து மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.

ஆனால் மர்மநபர் கூறியபடி நீலவ்வாவுக்கு பகுதி நேர வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், மர்நபரை அவர் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை நீலவ்வா உணர்ந்தார்.

இதையடுத்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.