புதுடெல்லி,
மத்திய மந்திரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார் பற்றி விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மத்திய அரசு இன்னும் அந்த அமைப்பை ஏற்படுத்தவில்லை. இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.