எதிரிகள் கிடையாது
மராட்டிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் அல்ல என கூறினார். மேலும் சிவசேனாவுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உருவாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை சிவசேனா கட்சி மறுத்து உள்ளது.
அமீர்கான், கிரன்ராவ் உறவு
இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கிண்டலாக கூறுகையில், அமீர் கான், கிரன் ராவை பாருங்கள், அவர்களின் பாதை மாறிவிட்டது. ஆனாலும் நண்பர்களாக உள்ளனர். அதுபோல தான் இங்கும், பாதைகள் மாறிவிட்டன. ஆனால் நட்பு தொடருகிறது. அரசியலில் நட்பு இருக்கும். அதற்காக நாங்கள் மாநிலத்தில் ஆட்சி அமைக்க போகிறோம் என்று
அர்த்தம் இல்லை" என்றார்.
சமீபத்தில் நடிகர் அமீர்கான், கிரன் ராவ் தம்பதி விவாகரத்து செய்துகொண்டனர். அதேநேரத்தில் அவர்கள் 2 பேரும், "எங்கள் உறவில் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பல விஷயங்களில் இணைந்து செயல்படுவோம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.