பெங்களூரு,
கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது என்றும், கொரோனா 2-வது அலையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியம், கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை பரிசோதனை செய்து வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்த பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். பொதுமக்கள் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். தகுதியானவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை பெற வேண்டும்.
கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. 50 சதவீத ஊரடங்கும் கிடையாது. முன்பு நாம் செய்த தவறுகளை தற்போது திருத்திக்கொள்ள வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்களை அனுமதிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பள்ளிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அவற்றை மூடுவது குறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பெங்களூருவில் 3 தற்காலிக மருத்துவமனைகள் இந்த வாரத்தில் இருந்தே செயல்பாட்டுக்கு வரும். கர்நாடக அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளால் கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.