புதுடெல்லி,
பீகாரில் மிகப்பெரும் அரசியல் திருப்பமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளம், கங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மறுநாளே, பாஜக ஆதரவுடன் முதல் மந்திரியாக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றார். நிதிஷ் குமார் முதல் மந்திரியாகவும் சுஷில் குமார் மோடி துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் யதவ், பீகாரில் நடைபெற்ற துரதிருஷ்டவசமானது. நிதிஷ் குமாரின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை .2015 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது இந்த கூட்டணி அமைவதற்காக அல்ல" என்றார். சரத் யாதவின் கருத்தை விமர்சித்துள்ள மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி, பீகார் அரசியலில் சரத் யாதவுக்கு ஆர்வம் இல்லை எனவும், தற்போது அவர் அமைதியற்ற முறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூடி கூறுகையில், மாநிலத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவு இதுவாகும். நிதிஷ் குமார் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். பீகாரில் எங்களுக்கு உள்ள ஒரே சவால் என்னவெனில், முடங்கியுள்ள வளர்ச்சியை எவ்வாறு தொடருவது என்பதேயாகும். சரத் யாதவ் தனது தனிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.