தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்.. வீடு புகுந்து இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

இந்த கொடூரத்தை நிகழ்த்திய மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே உள்ள கங்கொண்டனஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பலாத்காரம் செய்தது. பின்னர் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களையும் திருடிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண் போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இளம்பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூரத்தை நிகழ்த்திய மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு டி.எஸ்.பி. மட்டத்திலான அதிகாரி மூலம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்களா? என்றும் விசாரணை நடந்து வருவதாக கூறிய அவர்கள், இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறினர். மேற்கு வங்காள இளம்பெண் ஒருவர் வீடு புகுந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.