தேசிய செய்திகள்

துணை முதல்-மந்திரி கூட்டத்தில் செருப்பை காட்டி, அவதூறாக பேசி வன்முறை; எப்.ஐ.ஆர். பதிவு

சிலர் கருப்பு பட்டைகளை அணிந்தும், டி.கே. திரும்ப போ, திரும்ப போ என கோஷம் எழுப்பியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெங்களூரு

கர்நாடகாவில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சுர்கொந்தனகொப்பா பகுதியில் 287-வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இதன்பின்னர், இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் பேசி கொண்டிருக்கும்போது, திடீரென 20 முதல் 25-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிவக்குமாரை பேச விடாமல் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். உள்ஒதுக்கீடு கொள்கையை அரசு அமல்படுத்தியதில் லம்பானி சமூகத்தினர் முறையற்ற வகையில் நடத்தப்பட்டனர் என போராட்டக்காரர்கள் அப்போது குற்றச்சாட்டாக கூறினர்.

அவர்களில் சிலர் கருப்பு பட்டைகளை அணிந்தும், டி.கே. திரும்ப போ, திரும்ப போ என கோஷம் எழுப்பியும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது ஒரு நபர் கூட்டத்தில் அவரை நோக்கி செருப்பை காட்டியும், அவதூறாக பேசியும் உள்ளார்.

துணை முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உயரதிகாரி சாகர் அத்தர் வாலா மற்றும் பிற அதிகாரிகள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்றனர்.

இதனை தொடர்ந்து, அரசு துறையின் புகைப்பட கலைஞர்கள் அவற்றை வீடியோவாக படம் பிடித்தனர். காவல் உயரதிகாரி சாகர் அளித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 25 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.