புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜனதா தேசிய தலைவருமான அமித் ஷா தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். டெல்லியில் நடைபெற்ற இந்த பேரணியில் உள்துறை மந்திரி அமித் ஷா 500 மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.
முன்னதாக அமித் ஷா பேசும்போது, காந்தி இந்தியாவின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதுடன், சத்தியாகிரகத்தின் சக்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளார். தூய்மைக்கான தூதுவராகவும் காந்தி திகழ்ந்தார். சுதந்திரத்துக்கு பின்னர் அதனை ஒரு பெரிய இயக்கமாக நடத்தியது பிரதமர் மோடி மட்டுமே. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆனது முழுமையாக அழிய 400 ஆண்டுகள் காலம் ஆகும். அப்படிபட்ட பிளாஸ்டிக் மூலம் விலங்குகளும் பெரிதளவு பாதிக்கப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாட்டுக்கும், உலகுக்கும் பெரிய ஆபத்து. அதனை மக்கள் ஒழிக்க வேண்டும். இதனை ஒரு பெரிய இயக்கமாக மாற்ற வேண்டியது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் பொறுப்பு என்றார்.