புதுடெல்லி,
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி மக்களிடையே நிலவி வருகிற நிலையில் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
இதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், 146 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பதாகவும், 274 மாவட்டங்கள் 5 முதல் 15 சதவீத பாதிப்பு விகிதத்தை கொண்டு இருப்பதாகவும் காட்டுகின்றன என குறிபபிட்டார்.
10 வயதுக்கு குறைவானோர் 4.03 சதவீதத்தினர் முதல் அலையில் பாதிப்புக்குள்ளானதாகவும், இரண்டாவது அலையில் இந்த விகிதம் 2.97 சதவீதமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் முதல் அலையில் 10 முதல் 20 வயதினரில் 8.07 சதவீதம் பாதிப்புக்குள்ளானதாகவும், இது இரண்டாவது அலையில் 8.50 சதவீதமாக பதிவாகி இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
20-30 வயதினரில் முதல் அலையில் 20.41 சதவீதத்தினரும், இரண்டாவது அலையில் 19.35 சதவீதத்தினரும் பாதிப்புக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார். 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் முதல் அலையின்போது பாதிப்பு 67.5 சதவீதம் எனவும், இரண்டாவது அலையில் பாதிப்பு 69.18 சதவீதம் எனவும் அவர் தெரிவித்தார்.