Image courtesy : AFP 
தேசிய செய்திகள்

மரபணு மாற்ற கொரோனா வைரஸ் - சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு

சிங்கப்பூரில் சமீபத்திய வாரங்களில் குழந்தைகள் உள்பட பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளில் பி .1.617.2 புதிய வகை தொற்று பாதிப்பு உள்ளது என்பதை பைலோஜெனடிக் சோதனை காட்டுகிறது.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதியவர், இணைநோய் அல்லாதோர் மட்டுமல்லாமல் இளம் வயதினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, நோயின் தீவிரம் கருதி பல நாடுகள் இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது.

தற்போது இந்தியாவிலும் குழந்தைகளிடையே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 என்ற மரபணு மாற்ற கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு நேற்று தெரிவித்தது.

ஆனால், சிங்கப்பூரில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலும் உடனடியாக வெளியிட்ட டுவிட் பதிவில், சிங்கப்பூர் உடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என கூறினார்

இந்நிலையில், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு ஆபத்தான மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூரில் சமீபத்திய வாரங்களில் குழந்தைகள் உள்பட பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளில் பி .1.617.2 புதிய வகை தொற்று பாதிப்பு உள்ளது என்பதை பைலோஜெனடிக் சோதனை காட்டுகிறது. ஆனால் இது இந்தியாவில் தோன்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கெர்ஜிவாலின் கூற்று குறித்து சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் கூறும் போது சிங்கப்பூர் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இல்லை என்று வலியுறுத்தினார். அரசியல்வாதிகள் உண்மைகமை பேச வேண்டும் என கூறினார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறும் போது டெல்லி முதல்வர் இந்தியாவுக்காக பேசவில்லை. "இருப்பினும், நன்கு தெரிந்து கொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள் நீண்டகால நட்புகளை சேதப்படுத்தும் என கூறினார்.

வெளிவிவகாரத்துறையின் இணை செயலாளர் அரிந்தம் பாகி கூறுகையில், சிங்கப்பூர் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் குறித்த டெல்லி முதல்வரின் டுவிட்டிற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்க சிங்கப்பூர் அரசு இன்று இந்திய தூதரை அழைத்தது. மரபணு மாற்ற கொரோனா வைரஸ் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேச டெல்லி முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இந்திய தூதர் தெளிவுபடுத்தி உள்ளார் என கூறினார்.