தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது

சுமார் 3.5 கிலோ எடை கொண்ட 115 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சான் பிராஸ்சிஸ்கோவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்தின்பேரில் பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில், அந்த நபர் சுமார் 3.5 கிலோ எடை கொண்ட 115 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இந்த தங்கத்தை தனது கால்சட்டையில் உள்ள ஒரு பாக்கெட்டிலும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டிலும் மறைத்து வைத்து அந்த நபர் கடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து செய்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.5.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.