தேசிய செய்திகள்

கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய வாலிபர்

கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி என்னும் கிராமத்தை சேர்ந்த வாலிபர் திவேதி. இவர் செடிகள் அடர்ந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நச்சு பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது. ஏற்கனவே மது போதையில் இருந்த அவர் பாம்பை பிடித்து பதிலுக்கு பதிலாக துண்டு துண்டாக கடித்துக் கொன்றுவிட்டார்.

பாம்பின் நச்சு ரத்தத்தில் கலந்ததால் மயக்கம் அடைந்த திவேதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குஜராத் மாநிலம் மஹிசாகர் என்ற கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் பாவத் காலா பாரியா என்ற விவசாயியை விஷ பாம்பு கடித்தது. இதனால் அவருக்கு அந்த பாம்பின் மீது கோபம் ஏற்பட்டது.

இதனால் கோபத்தின் உச்சத்தில் அவர் அந்த பாம்பை கடித்தார். அதை கவனித்த அவரது உறவினர்கள், முதியவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் விஷம் ரத்தத்தில் கலந்ததால் முதியவர் பரிதாபமாக இறந்தார்.