தேசிய செய்திகள்

சொத்துக்காக நடந்த கொடூரம்: தந்தையை ஹாக்கி மட்டையால் தாக்கிய மகன்கள்

முதியவரை அவரது மகன்களே ஹாக்கி மட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தூபனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (70) . மாநகர போக்குவரத்து கழகத்தில் (பி.எம்.டி.சி.) டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவரது பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருந்தன.

இதில் பாதி சொத்துக்களை அவர் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன்களான மோகன் குமார், கஜேந்திராவும் ஆகிய 2 பேரும், தந்தை முனி கிருஷ்ணப்பாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு முனி கிருஷ்ணப்பா தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோகன்குமாரும், கஜேந்திராவும் முனி கிருஷ்ணப்பாவை வழி மறித்து சொத்துக்களை தங்களுக்கு தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவரை பெற்ற தந்தை என்றும் கூட பார்க்காமல் ஹாக்கி மட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கத்தியால் குத்திவிட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடிய அவரை அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில், சொத்து தகராறில் முனி கிருஷ்ணப்பாவை அவரது மகன்களே ஹாக்கி மட்டை, இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்ற மகன் மோகன்குமாரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு மகன் கஜேந்திராவை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.