மும்பை,
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா பங்களா அருகே பயங்கர வெடிப்பொருட்களுடன் நிறுத்தப்பட்ட கார் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து மராட்டிய அரசியலில் அதிர்வலை ஏற்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பிய குற்றச்சாட்டின் கீழ் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது மாமூல் புகார் தெரிவித்தார். அதாவது மும்பை போலீசாரை பார் மற்றும் ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அனில் தேஷ்முக் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அமலாக்கத்துறையும் அனில் தேஷ்முக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி அனில் தேஷ்முக் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6-ந் தேதி (இன்று) வரை அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.